மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தவருக்கு மரண தண்டனை

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு

காதலர் தினத்தன்று தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (18) இத்தீர்ப்பினை வழங்கினார். இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் திருகோணமலை-இல 38/1 பாடசாலை வீதி,ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஹெந்த ஹேவகே அனுர இஷாந்த (38வயது) எனவும் தெரியவருகின்றது.

2018ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 14ஆம் திகதி காதலர் தினத்தன்று கந்தளாய்-அக்போபுர பகுதியில் மனைவி கையடக்கத் தொலைபேசியில் உடம்பில் ஆடையின்றி வீடியோ இணைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது தான் குறுக்கே வந்ததால் என் மனைவி தனக்குதானே தீ வைத்துக் கொண்டதாக குற்றவாளியின் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்த குற்றத்திற்காக 2019ம் ஆண்டு 04ம் மாதம் 12ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த எதிரிக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவர் தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மரணம் ஏற்படுத்தியமை இலங்கை தண்டனை சட்டக்கோவை 296 பிரிவின்கீழ் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

குறித்த குற்றவாளிக்கு சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் பற்றி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திறந்த நீதிமன்றில் தமது தீர்ப்பினை வாசித்துக் காட்டினார். இந்நிலையில் குறித்த குற்றவாளி தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மரணம் விளைவித்தமை தொடர்பில் இவருக்கு மரண தண்டனை விதிக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

 


Add new comment

Or log in with...