குளிர்பானம் சுமந்தாலும் அணியின் வெற்றியே முக்கியம் -இம்ரான் தாஹிர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர், ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் குளிர்பானம் சுமந்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஐபிஎல் பருவத்தில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி முதன்மை விக்கெட் கைப்பற்றியவராக ஜொலித்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாபிரிக்காவின் சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் பருவத்தில் ஒரே ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த கரீபியன் பிரிமீயர் லீக் தொடரிலும் 15 விக்கெட்டுகளை தாஹிர் வீழ்த்தியிருந்தார். இருப்பினும் சென்னையின் ஆடும் லெவனில் அவர் இடம் பிடிக்காமல் உள்ளார். அவர் களத்தில் விளையாடும் வீரர்களுக்கு குளிர்பானம் எடுத்துச் செல்லும் பணிகளை அவ்வப்போது கவனித்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பல வீரர்கள் எனக்கு குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இப்போது நான் அந்த பணியை திரும்ப செய்து வருகிறேன். களத்தில் விளையாடும் வீரர்களுக்கு குளிர்பானம் கொடுத்து வருகிறேன். அது என் கடமையும் கூட. நான் அணியில் விளையாடுகிறேனா? இல்லையா என்பது விஷயமல்ல. எனது அணி வெற்றி பெறுவதுதான் முக்கியம்.

எனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செய்வேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...