எட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும். ‘‘புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்யுட்களில் புனைந்து காட்டும் ஆற்றலினும் அகத்தே தோன்றும் கருத்துக்களை உணர்ச்சியும், மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் சிறந்தது”.
அகமனப் புரிதல்களுக்கு இடமளிக்கும் பாடல்கள் பலவற்றைக் கொண்டது குறுந்தொகையாகும். இக்குறுந்தொகையில் இருபத்தோரு பெண்பாற் புலவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எழுதிய குறுந்தொகைப்பாடல்கள் மொத்தம் எழுபத்தைந்து என்ற அளவினை எட்டுகிறது..
தலைவனும் தலைவியும் காதலித்து மணம் புரிந்து வாழ்கின்றபோது பல உரிமைகளைத் தலைவிக்குத் தலைவன் நல்கி வாழும் வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கை ஆகின்றது.
ஆனால் இவ்வெற்றிகரமான வாழ்க்கை மிகக் குறைந்த நிலைப்பாடு உடையனவாகவே குறுந்தொகைச் சூழலில் உள்ளன. தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் அவை உள்ளன.
தலைவன் தலைவியை விட்டுப் பிரிகிறான். நீண்ட நாட்கள் ஆகியும் அவன் வந்து சேரவில்லை. தோழி தலைவனின் வாரா இயல்பை எண்ணிக் கவலை கொள்கிறாள். அந் நேரத்தில் தலைவி ‘‘தலைவர் தனக்குத் தந்தையும் தாயும் போன்ற இயல்பினை உடையவன். அவன் நிச்சயம் நம்மை நாடி வருவார்” என்று கூறித் தோழியைத் தேற்றுகிறாள்.
தன்னுடைய தந்தை, தாய் ஆகியோரை ஒரு நாள் பொழுதில் மறந்துவிட்டுத் தலைவனுடன் இல்லறத்தைத் தொடங்குகிறாள் தலைவி. தந்தை, தாய் ஆகியோர் இருந்தால் எவ்வாறு தலைவியை வருத்தப்படாமல் காப்பார்களோ அதுபோல இனித் தலைவன் தலைவியைத் தாங்கவேண்டும். தந்தையையும், தாயையும் தன் அன்பால், தன் அரவணைப்பால் சமப்படுத்த வேண்டும்.
இதனைச் செய்யும் தலைவன் வெற்றி பெறுகிறான். தலைவி மகிழ்ச்சியடைகிறாள்.
‘‘நம் நலம் தொலைய நலம்
மிகச் சாஅய்
இன்உயிர் கழியினும் உரையல்
அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ
புலவி அஃது எவனோ
அன்பிலங்கடையே”
என்ற பாடலில் அன்பின் காரணமாகவே புலவி தோன்றுகிறது என்று தலைவி பேசுகிறாள். இருப்பினும் தலைவன் வராத குறை இங்கு இருக்கத்தான் செய்கிறது.
அள்ளுர் நன்முல்லையாரின் பாடல் ஒன்றில் தலைவி தலைவனுடன் இணைந்து இருக்கும் இரவுப் பொழுது கழிய மெல்ல வைகறை வந்து விடுகிறது. அவ் வைகறை வாள் போல் தோன்றி இருவரையும் பிரித்தது என்று தலைவி எண்ணுகிறாள்.
‘‘குக்கூ என்றது கோழி. அதன் எதிர்
துட்கென்றது என் தூஉ நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை
வந்தன்றால் எனவே”
இப்பாடலில் தோள் தோய் காதலர் என்பது தலைவன் தலைவியின் நெருக்கத்தைக் காட்டும் பகுதியாகும். வாள் என்பது இருவரின் இணைவைப் பிரிக்கும் வைகறையாகின்றது. இரவு முழுவதும் தலைவனும் தலைவியும் மகிழ்ந்து இருந்தனர் என்பதை இப்பாடல் காட்டுகிறது. இப்பாடலைத் தலைவியின் பூப்புடன் தொடர்புபடுத்தி உரையாசிரியர்கள் உரை காணுகின்றனர்.
அதற்கான எக்குறிப்பும் இல்லாத நிலையில் இந்தப்பாடல் அந்த உள் கருத்து உடையது என்று வலிந்து நோக்க இயலவில்லை. தலைவனும் தலைவியும் தோள் தோய்ந்து இன்பம் கொண்டனர் என்பதற்கு இப்பாடல் சான்றாகின்றது.
பெண்பாற் புலவர்களின் பாடல்களில் ஓரிரு பாடல்கள் மட்டுமே தலைவனுடன் தலைவி கொண்ட இன்பத்தின் சான்றினைக் காட்டும் பாடல்களாக விளங்குகின்றன. மற்றவை வருத்தமிகுதியைக் காட்டும் பாடல்களாகவே உள்ளன.
பல பாடல்களில் தலைவியின் வருத்தம் பதிவாகியுள்ளது. காதலிக்கும்போது தந்த விடுதலையைக் கற்பில் மறக்கிறான் தலைவன் என்ற ஏக்கம் பல பெண்பாற்புலவர் பாடல்களில் எதிரொலிக்கின்றது.
நோம் என் நெஞ்சே, நோம்,
என் நெஞ்சே,
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல்,
நோம் என் நெஞ்சே
அமைதற்கு அமைந்த நம் காதலர் அமைவு இலர் ஆகுதல் – என்ற காரணத்தால் தலைவி வருத்தம் கொள்கிறாள். காதலிக்கும்வரை அமைதற்கு அமைந்த தன்மை உடைய காதலன் காதலித்துத் திருமணம் ஆனபின்பு அமைவிலர் ஆனதின் காரணம் யாது என்பது தலைவிக்குத் தெரியாததாகின்றது.தலைவியைக் காண ஒரு நாள் மட்டும் வரவில்லை. இருநாள்கள் இல்லை. பல நாட்கள் தலைவியின் அன்பினைப் பெறத் தலைவன் முயற்சித்தான். பணிந்து பேசினார். அவளின் நெஞ்சம் அவனை ஏற்றுக்கொண்டபின் சென்றவன் சென்ற இடம் தெரியவில்லை. ஏற்றுக்கொண்டபின் அவனின் நடைமுறைகள் மாற்றம் பெற்றுவிடுவது ஏனோ என்று தோழியும் தலைவியும் கவலைப்படுகின்றனர்.(ஸ)
Add new comment