ஒரு கையில் 5000 ரூபாவை கொடுத்துவிட்டு மறு கையில் வசூலிப்பது நயவஞ்சகமானது

அரவிந்தகுமார் கண்டனம்

ஒரு கையில் ஐயாயிரம் ரூபாவை கொடுத்து மறு கையினால் அதனை மீளப் பெறும் நயவஞ்சக செயலை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்கம் ஐயாயிரம் ரூபாவை வலது கையால் வழங்கி அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து இடது கையால் அந்த பணத்தை தந்திரமாக வசூலித்து வருகிறது.

முதலாம் கட்ட ஐயாயிரம் ரூபா நிவாரண நிதியே இன்னும் பூரணமாக வழங்கப்படாத நிலையில் இரண்டாம் கட்ட நிவாரண நிதி வழங்கும் செயற்பாடு இடம்பெற்று வருவது வேடிக்கையானது.

இந்த நிவாரண வழங்கலில் ஊழலும், முரண்பாடுகளும், பாகுபாடுகளும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. மேலும் அரசின் எந்தவொரு நிவாரணதிட்டத்தையும் பெருந்தோட்ட மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகிறது.

இதுவரை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு எட்டாக் கனியாவே உள்ளது. ஆகவே, பெருந்தோட்ட மக்கள் விடயத்தில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...