729 வாகனங்கள் பொலிஸ் வசம்
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் சட்டத்தை மீறி செயற்பட்ட சுமார் 3,000 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (25) மாலையுடன் ஐந்து நாட்களாக தொடர்கிறது.
ஊரடங்கு வேளையில் அதனை சட்டத்தை மதிக்காது, நடந்துகொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களால் இன்று (25) காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 23 வாகனங்களைள பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் இன்று (25) நண்பகல் 12.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 19 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த ஐந்து நாட்களில்
- 2,908 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- 748 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
இதேவேளை, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருப்பது, மக்களின் நலனுக்காக எனவும், எனவே அனைவரும் வீட்டினுள்ளேயே இருந்து அதனைக் கடைப்பிடிக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊரடங்கு அமுலில் இருக்கும் நேரத்தில் மிக அவசர தேவையின்றி வெளியில் செல்வதானது, பிடியாணை இன்றி கைது செய்யப்படும் குற்றமாகும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
Add new comment