காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் வான் தாக்குதல்

காசாவில் இருந்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக பலஸ்தீன பகுதி மீது இஸ்ரேல் கடந்த சனிக்கிழமையும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை வெளியிட்டது தொடக்கம் இரு தரப்புக்கும் இடையே பரஸ்பரம் தாக்குதல் இடம்பெற்று வருகிறது. டிரம்பின் இந்தத் திட்டத்தை பலஸ்தீனர்கள் முழுமையாக நிராகரித்தனர்.

“மத்திய காசா பகுதியின் தீவிரவாத அமைப்பான ஹமாஸின் இலக்குகள் மீது போர் விமானங்கள் மற்றும் ஹொலிகொப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் இருந்து இரு ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலில் விழுந்ததை அடுத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த ரொக்கெட் வீச்சை அடுத்து காசா பகுதி மீது தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை ரத்துச் செய்வதாக இஸ்ரேல் அறிவித்தது.

ரொக்கெட் வீச்சுகள் காரணமாக விரிவாக்கப்பட்ட மீன்பிடி வலயம், மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட 500 வர்த்தகப் அனுமதிகள் மற்றும் சீமந்து விநியோகம் ஆகியன இரத்துச் செய்யப்படுகின்றன என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...