ஜனாதிபதியால் தேசிய சம்பள ஆணைக்குழு நியமனம்

தேசிய சம்பளக் கொள்கையொன்றை தயாரிப்பதற்கும் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கும் தேசிய சம்பள ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி அவ்வப்போது திருத்தங்களுக்குட்பட்டு வந்த தேசிய சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழு இரத்து செய்யப்பட்டுள்ளது.   புதிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் 14 ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. 

அரச மற்றும் தனியார் துறைகளின் சம்பளங்கள் மற்றும் வேதனங்களின் பேண்தகைமையை தொடர்ச்சியாக பேணுவதற்காக அத்துறைகளின் சம்பளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊதிய கட்டமைப்புக்களையும் மீளாய்வு செய்து, அரச துறையிலும் தனியார் துறையிலும் தொழிற்படை தேவைக்கேற்ப இதனை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.   உபாலி விஜேவீரவின் தலைமையிலான இவ் ஆணைக்குழு 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.   சந்திராணி சேனாரத்ன, கோட்டாபய ஜயரட்ன, சுஜாதா குரே, மதுரா வேஹேல்ல, எம்.எஸ்.டி.ரணசிறி, வைத்தியர் ஆனந்த ஹப்புகொட, உயர் நீதிமன்ற நீதியரசர் சஞ்ஜீவ சோமரத்ன, அஜித் நயனகாந்த, ரவி லியனகே, சரத் எதிரிவீர, பேராசியர் ரஞ்சித் சேனாரத்ன, பொறியலாளர் ஆர்.எம்.அமரசேகர மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஸ்ரீ ரணவீர, டப்ளியு.எம்.பியதாச ஆகியோர் இவ் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஜனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்கள் நேய அரச சேவை ஒன்றை கட்டியெழுப்புவதற்கான அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக சேவை தேவைக்கேற்ப மனித வளங்களை பயன்படுத்தும் நீண்டகால திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.  


Add new comment

Or log in with...