கண்டியில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாண வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியில் ஜயதிலக விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டரங்கில் பத்து நாடுகள் பங்குபற்றி குத்துச்சண்டை போட்டிகள் கடந்த பெப்ரவரி 08 - 10 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன.
பிரான்ஸ், சிங்கப்பூர்,கனடா, இந்தியா, பாக்கிஸ்தான், பெல்ஜியம், ஆப்கானிஸ்தான், பல்கேரியா, எகிப்து மற்றும் இலங்கை உட்பட பத்து நாடுகள் இக்குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றியிருந்தன.
வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து ஏழாம் அறிவு தற்காப்புகலை அமைப்பின் தலைவரும் வடக்கு மாகாண கிக்பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான எஸ். நந்தகுமார் தலைமையில் வவுனியாவிலிருந்து சென்ற 19 வீரர் மற்றும் வீராங்கனைகள் இலங்கை தாய்நாட்டிற்காக குத்துச்சண்டை பங்குபற்றி 17 தங்கப்பதக்கங்களையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் பெற்று இலங்கையை முன்னணி நிலைக்கு இட்டுச் சென்றதுடன் வட மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ். சஞ்சயன் எனும் மாணவன் சிறந்த குத்துச்சண்டை வீரனுக்கான சிறப்பு விருதினையும் பெற்றுக்கொண்டிருந்தார்.
இலங்கை சவாட் (savate) கிக்பொக்சிங் அமைப்பின் தலைவரும், சர்வதேச கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான சி.பூ. பிரசாத் விக்ரமசிங்க தலைமையில் இலங்கை சம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(கோவில்குளம் குறூப் நிருபர் - காந்தன் குணா)
Add new comment