கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு

கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தெரிவு செய்யப்பட்டார்.

கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி எம்.ஏ.றக்கீப் தலைமையில் இன்று (12 ) இடம்பெற்ற விசேட அமர்வின்போதே இவர் தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த புதிய பிரதி மேயர் தெரிவில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் வழிமொழிந்ததுடன் அதே கட்சியை சேர்ந்த ஏ.எம் றோசன் அக்தர் வழிமொழிந்த நிலையில் சபையில் சமூகமளித்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய பிரதி முதல்வராக தெரிவானார்.

முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் (தமிழர் விடுதலை கூட்டணி ) கட்சி தலைவரினால் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதனை தொடர்ந்து எழுந்த வெற்றிடத்திற்கு புதிய  பிரதி முதல்வராக ரஹ்மத் மன்சூர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று(12) மாநகரபையில் நடைபெற்ற இவ்விசேடகூட்டத்தில் மாநகர சபையின் 41 உறுப்பினர்களில் 15 பேரே சமுகமளித்திருந்ததுடன் சபை நடாத்த முதல்வருடன் சேர்த்து 15 பேர் இப்பிரதி முதல்வர் தேர்வில் சமூகமளித்திருந்தனர்.இப்பிரதி முதல்வர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் முன்னிலையில் நடைபெற்றதுடன் பிரதி முதல்வர் தேர்வில்கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்களும், சுயேட்சை குழு உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதி முதல்வராக தெரிவானவர் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் புதல்வராவார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பு செயலாளராகவும்,கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் செயற்பட்டுவரும் இவர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழையமாணவருமாவார்.

பாறுக் ஷிஹான்


Add new comment

Or log in with...