குற்றச்சாட்டுகளை ரிஷாத் மறுப்பு அமைச்சர்; விமலிடமிருந்து 100 கோடி நஷ்டஈடு

அமைச்சர் விமல் வீரவன்ச தன் மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்குள் விமல்வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்களை அவர் முற்றாக மறுத்துள்ளதுடன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், அவர் தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்ததாகவும், பாராளுமன்ற தெரிவுக்குழு சாட்சியங்களில் அவற்றுக்கான தெளிவுபடுத்தலை வழங்கி இருந்ததாகவும் ரிஷாட் பதியுதீன் மேலும் குறிப்பிட்டார்.

“அமெரிக்காவிலோ வேறு எந்த நாட்டிலோ தனக்கு எந்த வங்கிக் கணக்கும் இல்லையெனவும், 52 நாள் அரசாங்கத்தில் அமெரிக்க வங்கிக் கணக்கொன்றில் தனது பெயரில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டதாகவும் 200 க்கு மேற்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதை அவர் நிரூபிக்க வேண்டுமெனவும் விமல் வீரவன்சவுக்கு சவால் விடுத்துள்ளார். வெறுமனே தேர்தல் வெற்றிக்காக பேசிக்கொண்டிருக்காமல், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஒப்புவிக்க வேண்டும்.

அத்துடன், சதொச நிறுவனத்துக்கான ஜெனரேட்டர் கொள்வனவில் பாரிய ஊழல் நடந்திருப்பதாக இன்னுமொரு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். இதுவும் அப்பட்டமான பொய்யாகும்.

எனவே, விமல் வீரவன்சவின் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் முற்றாக மறுப்பதுடன், அரசியலுக்காக பொய்யான பிரசாரங்களை இனிமேலும் கட்டவிழ்த்து விடுவதை அவர் உடன் கைவிட வேண்டுமென கோருகின்றேன்.

வில்பத்து தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறும் சுமார் 02 மாதங்களுக்கு முன்னதாக கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தேன் என்று கூறினார்.


Add new comment

Or log in with...