ஸஹ்ரானுடன் தொடர்பு: பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் மீண்டும் விளக்கமறியலில்

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மீண்டும் மே 6 ஆம் திகதி வரை  தடுப்பு காவலில் வைக்குமாறு  கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு  இன்று (29)  கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது சந்தேக நபரை மீண்டும் எதிர்வரும் மே 6 ஆம் திகதி வரை தடுப்பு காவலில்  வைக்குமாறு உத்தரவிட்டார்.

விசாரணையின் போது மேலதிக அறிக்கைகள் பொலிஸாரினால் இன்றைய தினம்  தாக்கல் செய்யப்பட்டு  மீண்டும் சந்தேகநபர் விசாரணைக்காக மீண்டும்  தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வைத்து கடந்த வருடம் கைதான குறித்த சந்தேக நபர் அண்மையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இருந்த போதிலும் தற்போது மீண்டும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்றத்திற்கு  அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டு விசாரணைக்காக  அழைத்து வரப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம்   உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீம் தலைமையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு அதனை தொடர்ந்து ஏப்ரல் 26 அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் குறித்த அமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நாட்டின் நாலாபுறமும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்


Add new comment

Or log in with...