ஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று நேற்று முன்தினம் நடைபெற்றது. உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து விளையாடிய சானியா மிர்சா (வயது 33), ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜோர்ஜியா)- மியூ கட்டோ (ஜப்பான்) ஜோடியை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

இதையடுத்து கால் இறுதி போட்டியில், அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியை சானியா ஜோடி நேற்றுமுன்தினம் எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

அரையிறுதி போட்டியில், ஸ்லோவேனியா-செக் குடியரசு ஜோடி தமரா ஜிதான்செக் மற்றும் மேரி பவுஸ்கோவாவை சானியா மிர்சா ஜோடி சந்திக்க உள்ளது.

முதல் சுற்றின் வெற்றிக்கு பிறகு, சானியா மிர்சா தனது மகன் இஜானுடன் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...