அதிபரை மாற்றுமாறு, மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

அதிபரை மாற்றுமாறு, மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்-Protest-Students and Parents Request to Transfer Principal-Mullaitivu

மாற்றித் தருவதாக வலையக்கல்விப் பணிப்பாளர் உறுதி

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வேணாவில் வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இன்றைய தினம் (14) இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், பாடசாலையின் அதிபர் முறையற்ற விதத்தில் செயற்படுவதாக தெரிவித்திருந்தனர்.

இதன்போது, பாடசாலையின் அதிபர் உடனடியாக மாற்றப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள், பதாகைளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபரை மாற்றுமாறு, மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்-Protest-Students and Parents Request to Transfer Principal-Mullaitivu

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

குறித்த பாடசாலையின் அதிபர், பெற்றோர்களிடம் சாதியம் பேசுவதுடன், இழிவாகவும் தரக்குறைவாகவும் தொடர்ச்சியாக பேசிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாடசாலை மாணவர்களின் மதிய உணவிற்காக எடுத்துச் செல்லும் மீன்களை மது அருந்தவதற்கு பயன்படுத்துவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதிபரை மாற்றுமாறு, மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்-Protest-Students and Parents Request to Transfer Principal-Mullaitivu

இது தொடர்பில் பல தடவைகள் வலயக்கல்விப் பணிமனைக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்க தவறியமையினாலேயே தாம் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு வலையக் கல்விப் பணிப்பாளர் திருமதி. உமாநிதி புவனராஜா, அதிபர் இனி பாடசாலைக்கு வருகை தரமாட்டார் எனவும், புதிய அதிபரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்ததனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதுடன், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்குள் செல்ல அனுமதித்தனர். 

அதிபரை மாற்றுமாறு, மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்-Protest-Students and Parents Request to Transfer Principal-Mullaitivu

அதன் பின்னர் பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்றன.

பாடசாலை முதல்வரை மாற்றுவது தொடர்பாக, முல்லைத்தீவு மாவட்ட அரச தலைவரின் இணைப்பாளரின் பிரதிநிதியிடம் அரச தலைவருக்கான மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்திருந்தனர்.

அதிபரை மாற்றுமாறு, மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்-Protest-Students and Parents Request to Transfer Principal-Mullaitivu

மேலும் இந்த ஆர்ப்பாட்டதில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களுடன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந், கரைதுரைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் இணைப்பாளர் பத்மநாதன் சுபாகரன், முல்லைத்தீவு மாவட்ட அரச தலைவரின் இணைப்பாளருடைய பிரதிநிதி என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(விஜயரத்தினம் சரவணன்)


Add new comment

Or log in with...