முசலி காணிப் பிணக்குகள் உரிய முறையில் தீர்க்கப்படும்

மாவட்ட காணி ஆணையாளர் தெரிவிப்பு

மன்னார் முசலி பிரதேசத்தில் காணப்படும் காணிப் பிணக்குகளை உரியமுறையில் தீர்க்கப்படுவதற்கான வழிவகைகள் சரியான முறையில் ஆராயப்பட்டு தீர்வு வழங்கப்படும் என மன்னார் மாவட்ட காணி ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் 2020ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மாவட்ட  அபிவிருத்திக் குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்ராஸ், மற்றும் 5 பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மாவட்டத்தின் அவசிய தேவைகளை கருதி திட்டங்கள் விரைவுபடுத்தல் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது. இதனை தொடர்ந்து முசலி பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக இடம்பெற்றுவரும் காணி பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாண காணி ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன், மற்றும் உதவி ஆணையாளர் கைலாசபிள்ளை மகேஸ்வரன் உட்பட பாதிப்புக்குள்ளான முசலி பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது முசலி பிரதேச பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வீட்டு திட்டங்கள் அமைக்கப்பட்டும், அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் வீட்டுத்திட்டம் இன்றி புறக்கணிக்கப்பட்டு உள்ளமை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது. முசலி பிரதேசத்தில் சுமார் 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் வன வளத்திணைக்களம் குறித்த காணிகளை விடுவிக்காத நிலை காணப்படுவதாக கூறப்பட்டது.  சுமார் 600 ஏக்கர் காணிகளுக்கு 1500 காணி உரிமங்கள் வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான நிலையில் இப் பிணக்குகள் உரியமுறையில் தீர்க்கப்படுவதற்கான வழிவகைகள் சரியான முறையில் ஆராயப்பட்டு இதற்கான தீர்வு எட்டப்படும் என காணி ஆணையாளர் தெரிவித்தார்.

மன்னார் குறூப் நிருபர்  


Add new comment

Or log in with...