Thursday, March 28, 2024
Home » சுகாதாரம், கல்வி பிரச்சினைகள் தீர்வுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு – ஜனாதிபதி
வடக்கில் முன்னுரிமை அடிப்படையில்

சுகாதாரம், கல்வி பிரச்சினைகள் தீர்வுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு – ஜனாதிபதி

by damith
January 8, 2024 6:10 am 0 comment

முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படுமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதன் கீழ் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் (06) சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தொடர்பில் இளைஞர் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலிலே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறை, கல்வித்துறை சார்ந்த இளைஞர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 300 பேர் இதில் கலந்துகொண்டனர். அவர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில்களை வழங்கினார்.

வடமாகாணத்தை தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கு தேவையான சகல ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரச அதிகாரிகள் மற்றும் இளைஞர்களும் தங்களின் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறைபாடுகள்,பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவது தொடர்பிலான பரிந்துரையொன்றும் கையளிக்கப்பட்டது. யாழ், பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் இதை,ஜனாதிபதியிடம் கையளித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் உள்ளிட்டவர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சத்குணராஜா, முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், கல்விசார் ஊழியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலின் பின்னர் யாழ்ப்பாணம் ரியோ ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு விஜயம் செய்து , ஐஸ்கிரீம் சாப்பிட்டார். meet-and-greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வடமாகாணத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம் மற்றும் திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் திறமை செலுத்தியோர் கலந்துகொண்டதோடு அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT