மாத்தளை – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (03) மரணமானார். இவ்விபத்து மாத்தளை – குருநாகல் பிரதான வீதியில் தொம்பவளை பகுதியில் அண்மையில் இடம்பெற்றது.
இவ் விபத்தில் உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையில் உயர்தர பிரிவில் கல்வி கற்று வரும் சஹ்ரான் வயது (18) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தினத்தன்று காலஞ்சென்ற நபர் மாத்தளையிலிருந்து மோட்டார் சைக்கிளில் நிக்ககொள்ளையை நோக்கி பயணித்து கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேராக மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மஹவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(மாத்தளை சுழற்சி நிருபர்)