பொலன்னறுவையில் நடைபெற்று வரும் சிரேஷ்ட வீரர்களுக்கான தேசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 64 கிலோகிராம் எடைப்பிரிவில் பங்குகொண்ட வடக்கின் நட்சத்திர வீராங்கனை ஆஷிகா விஜயபாஸ்கர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 2023 ஆண்டுக்கான கனிஷ்ட, இளையோர் மற்றும் சிரேஷ்ட வீரர்களுக்கான தேசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் பொலன்னறுவையில் உள்ள கல்லேல்லவில் கடந்த 27ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் யாழ்ப்பாணம் பளுதூக்கல் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான 64 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குகொண்ட ஆஷிகா, ஸ்னெச் முறையில் 65 கிலோ கிராம் எடையையும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் முறையில் 80 கிலோ கிராம் எடையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 145 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.
2021ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டிகளில் 19 தடவைகள் தேசிய சாதனையை முறியடித்த ஆஷிகா, கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு தேசிய மட்டப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.