தர்காநகர், அளுத்கம் வீதியமுஸ்லிம் பெண்கள் கல்லூரியின் (தேசிய பாடசாலை) மாணவர்களின் பழைய மாணவர் ஒன்றுகூடல் நாளை மறுதினம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இலவசக்கல்வியின் தந்தை சி.டப்ளியூ.டப்ளியூ. கன்னங்கரா உருவாக்கிய 54 மத்திய மகா வித்தியாலயங்களில், முஸ்லிம்களுக்கான ஒரே முஸ்லிம் பெண்கள் கல்லூரியாக விளங்கும் இப்பாடசாலையின் உருவாக்கத்துக்காக பெரிதும் பங்காற்றிய மர்ஹூமா பின்தாரா காலித்தின் சேவையும் இவ்விடத்தில் நினைவுகூரப்பட உள்ளது. களுத்துறை மாவட்டத்தில் காணப்படும் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான இக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பாடவிதான செயற்பாடுகளிலும், இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் தேசிய மட்டம் வரை சாதனைகளை படைத்துள்ளனர்.
இங்கு கற்று வெளியேறிய மாணவிகள் நாட்டின் பல பாகங்களிலும் பல உயர் பதவிகளையும் வகிக்கின்றனர். இக்கல்லூரியில் கல்வி கற்று வெளியேறிய மாணவ மாணவிகளின் கடந்த கால நினைவுகளை மீட்டிப் பார்க்க இந்த ஒன்றுகூடல் பெரிதும் உதவக்கூடியதாக அமையும் என்றும் இங்கு கலைநிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.