இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பங்களாதேசப் பிரமதர் ஷேக் ஹஸீனாவுக்கும் இடையில் நிலவிவரும் நெருக்கமான இராஜதந்திர உறவு எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையும் என்று இந்தியாவுக்கான பங்களாதேசத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் அண்டலிப் எலியாஸ் தெரிவித்துள்ளார்.
பங்களாதேசத்தின் 52 வது சுதந்திர தின வைபவம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இதன் நிமித்தம் மேற்குவங்காள அரசின் விவசாயம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் சோபோண்டேப் சட்டோபாத்யாயினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இரண்டு நாள் கலாசார நிகழ்ச்சியை பிரதி உயர் ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இந்த இரண்டு நாட்களும் இடம்பெற்ற கலை, கலாசார நிகழ்ச்சிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் சாட்சியங்களாக விளங்குகின்றன. உலகில் பங்களாதேசத்தை அங்கீகரித்த முதல் நாடாக இந்தியா விளங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் பொன்னான கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். எங்களது தொலைநோக்கு மிக்க தலைவர்களது தலைமையின் கீழ், இந்த உறவு எதிர்வரும் நாட்களில் மேலும் வலுப்பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் சிறப்பான இராஜதந்திர உறவைப் பேணி வருகின்றனர். இரண்டு அண்டை நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் ஒருவரையொருவர் மதிக்கும்போது அது மிகவும் முக்கியமானதாக அமையும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 2024 இல் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோன்று 2024 பங்களாதேசத்துக்கும் முக்கியத்துவம் மிக்க வருடமாக இருக்கும். அதனால் துடிப்பான ஜனநாயகம், மக்களின் தெரிவுகள் எவ்வாறு நாடுகளை அவர்களின் வெற்றிகளுக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு இவ்விரு நாடுகளும் உலகிற்கு நல்ல சாட்சிகளாக உள்ளன என்றும் பிரதி உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.