இறக்கமாம் மற்றும் ரம்புக்கனை பகுதிகளில் இரு ஆண்களின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27) காலை அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூகுண விகாரைக்கு மேற் பகுதியில் காணப்படும் ஏரிக்கு அருகில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 45-50 வயது மதிக்கத்தக்க, 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட ஆண் எனவும், ஊதா நிற ரீசேர்ட்டும், செம்மஞ்சள் மற்றும் ஊதா கலந்த சாரமும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் அம்பாறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் இறக்காமம் பொலிஸார் விசாணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நேற்றையதினம் (27) ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல புகையிரத கடவைக்கு அருகில், மா ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 35-40 வயது மதிக்கத்தக்க, 5 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட ஆண் எனவும், கறுப்பு நிற அரைக்கை சட்டையும், கீழ் பகுதியில் பச்சை நிற உள்ளாடையும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.