ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தான் எவரிடமும் தெரிவிக்கவில்லை. ஆனால், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அவ்வாறு கோரிக்கை வைத்தால் அதை செயற்படுத்தவுள்ளதாவே தான் கூறியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த போது, “கடந்த வாரம் என்னுடன் சில ஊடகவியலாளர்கள் வந்து உரையாடிய போது, பல்வேறுபட்ட கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்துக்கும் நான் பதிலளித்தேன்.
அப்போதே அவர்கள், தமிழ் மக்கள் சார்பாக யாராவது ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குகின்றார்களா? என கேள்வி எழுப்பினர். ஒருவரின் பெயரைக் கூறி அவரை வேட்பாளராக களமிறக்கினால் நல்லது.
அவர் இலங்கைக்காக சர்வதேச ரீதியில் தங்கப்பதக்கத்தை வென்ற ஒருவரென்பதால், அனைவரும் அறிந்திருக்கக்கூடிய ஒருவர் என்ற ரீதியில் வேட்பாளராக களமிறக்க விரும்பினேன். ஆனால், நான் அவரை தொடர்புகொண்டு வினவிய போது, தனது சுகயீனம் காரணமாக முடியாதெனக் கூறியதாக கூறினேன்.
அப்போது ஊடகவியலாளர்கள், உங்களை களமிறங்குமாறு ஏனைய கட்சிகள் கேட்டால் உங்களது நிலைப்பாடு என்னவென்று வினவினர். அவ்வாறு வினவியமைக்கே நான், அனைத்துக் கட்சியினரும் என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு கூறினால், நான் அதைச் செயற்படுத்துவேனெனக் கூறினேன்.
அது தவிர, எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கவில்லை. அதை ஊடகவியலாளர்களே கேட்டதுடன், அவர்களே செய்தியாக பிரசுரித்துள்ளனர்” என்றார்.
யாழ். விசேட நிருபர்