மாத்தறை சிறைச்சாலையில் சில கைதிகள் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்கா தெரிவித்தார்.
மாத்தறை சிறைச்சாலையில் 17 கைதிகள் நோய் வாய்ப்பட்டதைத்தொடர்ந்து அவர்களில் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்ததாகச் கூறப்படும் நிலையில், மாத்தறை சிறைச்சாலையில் கடுமையான சுகாதார நடவடிக்கைகளை அமுல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் கடந்த 48 மணித்தியாலங்களில் சிறைச்சாலையில் இதேபோன்ற அறிகுறிகளுடன் கூடிய கைதிகள் அடையாளம் காணப்படவில்லை என்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 16 கைதிகளில் 2 பேர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.கைதிகளின் உடல்நிலை குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் இன்னும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நத்தார் பண்டிகையையொட்டி, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பலர் விடுவிக்கப்பட்டனர். இதில் மாத்தறை சிறைச்சாலையிலிருந்தும் 19 கைதிகள் அன்றைய தினம் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
வெலிகம தினகரன் நிருபர்)