எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவாரென, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சகல கட்சிகளும் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவை பொது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது காலத்தின் தேவையாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய அனைத்து கட்சிகளும் இணைந்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்து வருகின்றன.
நாட்டின் தற்போதைய நெருக்கடியான பயணம் இலகுவானதல்ல. இருளில் செல்லும் பயணம். அந்தவகையில்,முறையான ஒரு எதிர்காலத்திற்கான தூர நோக்குமிக்க பயணத்தைக் காண முடிகிறது.
மக்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்காவிட்டாலும், உள்ளதைக் கொண்டு ஓரளவு இயல்பு வாழ்க்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதனை பாதுகாத்து முன்செல்ல வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்த ஆண்டாக அமைய வேண்டும். அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே சகல கட்சிகளும் இணைந்து வேட்பாளராக நிறுத்துவது உறுதி. எவரும் போட்டியிட முடியும். எனினும், மிக நெருக்கடியான காலத்தில் நாட்டிற்கு தலைமைத்துவம் வழங்கி ஆட்சியை முன்னெடுத்துச் செல்பவரே அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்