அஸ்வெசும மக்கள் நலன்புரித் திட்டத்தை உரிய காலப்பகுதியில் நடைமுறைப்படுத்திய மாவட்டமாக இலங்கையில் யாழ். மாவட்ட செயலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். கடந்த (18) திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் புள்ளி விவரத் திணைக்களம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் இலங்கை புள்ளி விவரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட கட்டடக்கூறுகளுக்கான தொகை மதிப்பு நிறைவடைந்துள்ளது. பல்வேறுபட்ட தடைகள் வந்த நிலையிலும் உத்தியோகத்தர்களின் செயற்பாடு காரணமாக விரைவாகவும் நேர்த்தியாகவும் இத்திட்டத்தை நிறைவு செய்துள்ளோம்.
அதேபோன்று அஸ்வெசும நலம்புரித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நாட்டில் கிராம சேவையாளர்கள் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் யாழ். மாவட்ட செயலகம் இலங்கையில் இத்திட்டத்தை உரிய காலப்பகுதியில் 80 வீதத்திற்கு அதிகமான வேலைகளை நிறைவு செய்த இலங்கையின் முதன்மை மாவட்டமாகத் திகழ்கிறது. எந்தத் தடை வந்தாலும் மக்களுக்கான பணியை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என்ற மனோநிலை அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அவ்வாறான ஒரு செயற்பாட்டின் மூலம் யாழ்.மாவட்டத்தில் இத்திட்டத்தை செயற்படுத்த உதவிய சகல மட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. இலங்கை புள்ளி விவரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இவ்வருடத்துடன் ஓய்வு பெறவுள்ளார். அவருக்கு இந்த இடத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே அரச பணியை பொறுப்பேற்ற அனைவரும் தங்களால் இயன்றவரை மக்களுக்கான பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கோப்பாய் குறூப் நிருபர்