அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடத் தகுதியற்றவர் என கொலராடோ உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
அந்த மாநிலத்தின் 2024 முன்னோடி வாக்களிப்பில் போட்டியிட நீதிமன்றம் அவருக்குத் தடை விதித்தது. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க பாராளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டதில், டிரம்ப்புக்கு உள்ள தொடர்புக்காக அந்தத் தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட ஒரு வேட்பாளர் தகுதியற்றவர் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை.
இப்போதைக்கு நீதிமன்றத் தீர்ப்பு கொலராடோ மாநிலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள குடியரசுக் கட்சி முன்னோடித் தேர்தலுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இருப்பினும் அது பரவலான வேறுபல தாக்கங்களை ஏற்படுத்துமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்பின் பிரசாரக் குழு, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது.