குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை செல்வதற்கு இலவச பருவகாலச் சீட்டுக்களை வழங்க மத்திய மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே கண்டியிலுள்ள அலுவலகத்தில் வைத்து அதனைக் கையளித்தார்.
இதுபற்றி மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக்கா தெரிவிக்கையில்,
மத்திய மாகாணத்திலுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இச்சலுகையை வழங்க மத்திய மாகாண போக்குவரத்து மின்சக்கதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாகாண கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை அதிபர்களது சிபாரிசு இதற்காகப் பெறப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட மாணவர்களது பாடசாலைக் கல்வி முடிவடையும் வரை இச்சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
இதன் முதற்கட்டமாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே 20 மாணவர்களுக்கு பருவகால இலவச டிக்கட்டுக்களை கையளித்தார். கண்டி மாவட்டத்தில் 10 பேருக்கும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தலா 5 பேர் வீதமும் பெற்றுக்கொண்டனர்.