கஹட்டகஸ்திகிலிய பகுதியில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கவைத்து காட்டுயானை ஒன்றினை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரத்மல்கஹவெவ கதுறுகஸ்கட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய விவசாயி ஒருவரையே கஹட்டகஸ்திகிலிய வட்டார வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலக அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நெலுகொள்ளாகட திருக்குராகம பகுதியில் அமைந்துள்ள சோளச் சேனைக்கு பொருத்தப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த விவசாயி நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வேண்டி சந்தேக நபரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் .
அநுராதபுரம் தினகரன் நிருபர்