மாத்தளை நந்திமித்ர ஏக்கநாயக்கா ஹொக்கி மைதானத்தை விரைவில் புனரமைப்பதற்கான ஒப்பந்தம் ஆசிய ஹொக்கி சம்மேளனத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் இவ்வைபவத்தில் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோகன திசாநாயக்கா, அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சமன் பெர்னான்டோ, மாத்தளை ஹொக்கி சங்கத்தின் செயலாளர் தயான் திசாநாயக்கா, மாத்தளை ஹொக்கி சங்கத்தின் உபதலைவர் முராத் ஒமர்தீன் ஆகியோர்களுடன் ஆசிய ஹொக்கி சம்மேளன தலைவர் உட்பட மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பில் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோகன திசாநாயக்கா தெரிவிக்கையில்,
மாத்தளை நந்திமித்ர ஏக்கநாயக்கா ஹொக்கி மைதானம் புனரமைக்கப்படவுள்ளது.
இலங்கையில் செயற்கை சூழலில் அமைந்த ஹொக்கி மைதானங்கள் இரண்டு மட்டுமே உள்ளன. அதில் ஒன்று கொழும்பு ரீட் மாவத்தையிலுள்ள ஹொக்கி மைதானம். மற்றையது மாத்தளையிலுள்ள நந்திமித்ர ஏக்கநாயக்க மைதானம்.
ஆனால் நந்திமித்ர ஏக்கநாயக்க மைதானம் 2009ஆம் ஆண்டின் பின்னர் இதுவரை புனரமைக்கப்படவில்லை. ஹொக்கி விளையாட்டில் பிரபல்யம் பெற்ற மாத்தளை மாவட்டத்துக்கு இது ஒரு பாரிய பிரச்சினையாகவுள்ளது.
எனவே இதுவிடயமாக ஆசிய ஹொக்கி சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அக்குறணை குறூப் நிருபர்