புத்தளம் நகரசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களுக்கான வடமேல் மாகாண ஆளுநரின் விஷேட இணைப்பாளராக முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் நேற்று முன்தினம் (19) மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே, வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வடமேல் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் ஆளுநரின் விஷேட இணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.எம்.ரபீக் , புத்தளம் நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான ஆளுநரின் இணைப்பாளராக செயற்படுவார்.
அத்துடன், பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்வது, ஆளுநரின் புத்தளம் விஜயத்தை ஒழுங்குபடுத்துவது, அபிவிருத்தி திட்டங்களுக்கான திட்ட மொழிவுகளை முன்வைப்பது போன்ற பணிகள் ஆளுநரின் இணைப்பாளர்களுக்குரிய அதிகாரங்களாக வழங்கப்பட்டுள்ளன.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்