Thursday, March 28, 2024
Home » நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பாதுகாப்பு படைகளின் பொறுப்புகளில் யாரும் தலையிட முடியாது

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பாதுகாப்பு படைகளின் பொறுப்புகளில் யாரும் தலையிட முடியாது

- இக்கட்டான சூழ்நிலைகளில் தலைமை தாங்க பயப்பட வேண்டாம்

by Rizwan Segu Mohideen
December 16, 2023 7:36 pm 0 comment

– தியத்தலாவைை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி

இந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

மக்களின் இறைமையையும் இலங்கையின் தனித்துவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புத் தரப்பினருக்கும் உண்டு என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன மற்றும் மத ரீதியாக எவரேனும் செயற்பட முற்பட்டால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார்.

இன்று (16) முற்பகல் தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தியத்தலாவைை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவ மரியாதை வழங்கி பெருமையுடன் வரவேற்கப்பட்டார்.

தேசத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வீரமிக்க தலைவர்களை உருவாக்கிய இராணுவத்தின் சிறந்த உத்தியோகத்தர் பயிற்சி நிறுவனமான தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியின் 98 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வு இதுவாகும். மேலும் பயிற்சியை நிறைவு செய்த 274 கெடட் உத்தியோகத்தர்கள் இன்று அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். வெளிநாடுகளைச் சேர்ந்த 06 கெடட் உத்தியோகத்தர்களும் பயிற்றுவிக்கப்பட்டு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு கெடட் உத்தியோகத்தர்களின் விடுகை அணிவகுப்பை பார்வையிட்டதுடன், திறமை வாய்ந்த கெடட் அணிக்கு விருதினையும், கெடட் வீரர்களுக்கு வாளையும் வழங்கினார்.

1972 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி, அப்போதைய யுத்தப் பயிற்சி நிலையம் என்று அழைக்கப்பட்ட இந்த கல்வியற் கல்லூரிக்கு ஆற்றிய விலைமதிப்பற்ற மற்றும் போற்றத்தக்க சேவைக்காக முதன்முறையாக அப்போதைய ஜனாதிபதியாக இருந்த வில்லியம் கோபல்லவ அவர்களால் ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கப்பட்டன.

மேலும், 1997 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால், அந்த ஜனாதிபதி வர்ணங்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு மீள்வழங்கல் மற்றும் புதிய கல்வியற் கல்லூரி வர்ணங்களும் வழங்கப்பட்டன. 25 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டாவது தடவையாக இன்று மீண்டும் வர்ணங்களை வழங்கிவைத்தார்.

பின்னர், கலைந்து சென்ற கெடட் அதிகாரிகளுடன் ஜனாதிபதி குழு புகைப்படத்திலும் கலந்து கொண்டார். இதனை முன்னிட்டு தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி நட்டார்.

இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை இராணுவம் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட திறமையான இராணுவம் எனவும், அதன் பெருமையைப் பேணுவது அதனுடன் இணைந்த அனைவரினதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

தனக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் அச்சமின்றி தலைமைத்துவத்தை வழங்குமாறு பிரசன்னமாகியிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இக்கட்டான காலங்களில் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும், அதனை மனதில் கொண்டு நாட்டுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரி சர்வதேச புகழ் பெற்ற ஒரு நிறுவனமாகும். அத்தகைய புகழ்பெற்ற நிறுவனத்தில் உங்கள் பயிற்சியை முடித்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இன்று முதல் இலங்கை இராணுவத்தில் இணைகிறீர்கள்.

இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் 1948 முதல் இறையாண்மை கொண்ட நாடாக செயற்பட்டு வருகிறோம். அந்த இறையாண்மை கொண்ட நாட்டின் அதிகாரம் மக்களுக்குரியது. அரசாங்கங்கள் மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மேலும் இந்த நாடு இலங்கை தனித்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இலங்கையர்கள். இலங்கையர்களாகிய நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எமது தேசியத்தை பாதுகாப்பதுடன் இலங்கையர் என்ற நாட்டின் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டும்.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது என்ன நடக்கும் என்பதை கடந்த காலங்களில் நாம் அனுபவித்தோம். அப்போது நாட்டின் இறையாண்மை மட்டுப்படுத்தப்படும். நாட்டு மக்களை சமமாக நடத்தும் வகையில் சமூக முன்னேற்றமும் ஏற்பட வேண்டும்.

பொருளாதார முன்னேற்றமும் சமூக முன்னேற்றமும் இதன்போது மிக முக்கியம். இந்த கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் இந்த கட்டமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பு ஜனாதிபதி முதல் கீழ்நோக்கிச் செல்கிறது.

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளது. அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது. அதே சமயம் அதிகாரம் சார் மக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அத்துடன் இலங்கையின் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த தனித்துவத்தை பாதிக்கும் வகையில் எவரேனும் செயற்பட முற்பட்டால் அல்லது இன மற்றும் மத அடிப்படையில் தனித்தனியாக செயல்பட முயற்சித்தால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு கேடு விளைவிக்கும் செயற்பாடாகும்.

இலங்கை இராணுவம் ஒரு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆசியாவில் நவீன இராணுவங்கள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், இலங்கை நான்காவது இடத்தில் இருந்தது.

1881 இல், இலங்கை காலாட்படை ஆரம்பிக்கப்பட்டபோது, நாங்கள் அந்த நிலையை அடைந்தோம். மேலும், வரலாற்றில் இடம்பெற்ற ஒவ்வொரு பாரிய போர்களிலும் நமது பாதுகாப்புப் படைகள் பங்கேற்றுள்ளன.

இந்த பெருமைமிக்க இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாப்பது உங்களின் பொறுப்பாகும். நீங்கள் தலைமை தாங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். அச்சமின்றி அந்தத் தலைமையை உங்களுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் வழங்குங்கள். உங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காதீர்கள். குறிப்பாக கடினமான காலங்களில்தான், தலைமைத்துவம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்தக் கடமையை நினைவில் வைத்து நாட்டுக்கான பொறுப்பை நிறைவேற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷார மகலேகம், உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் கலைந்து சென்ற கெடட் உத்தியோகத்தர்களின் பெற்றோர்கள் உட்பட அதிதிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT