கட்டுநாயக்க வந்தபோது பரிதாபம்
இலங்கை நோக்கி விமானத்தில் வந்த லெபனான் பிரஜை ஒருவரின் ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டுள்ளன. விமானத்தின் “பிஸினஸ்” ஆசனத்தில் வந்த இவரிடமிருந்தே இப்பணம் திருடப்பட்டது. இதைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் சீனப்பிரஜை ஒருவர் தலைமறைவாகி உள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் தனது தாயின் வைத்திய சிகிச்சைக்காக தாயுடன் ஓமான் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் புதன்கிழமை (13) காலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இரவு நேரமாக இருந்ததால் சகலரும் தூக்கத்திலிருந்த வேளையில் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.லெபனான் வர்த்தகரின் பயணப்பையை திறந்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான 14,000 அமெரிக்க டொலர்களை சீனப் பிரஜை திருடியுள்ளார்.
இதனை அறியாத வர்த்தகர் விமானத்திலிருந்து இறங்கி கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் அமெரிக்க டொலர்களை இலங்கை பணத்துக்கு வங்கியில் மாற்ற முற்பட்ட போதே பணம் திருடப்பட்டமை தெரியவந்தது. இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியதையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
தலைமறைவாகியுள்ள சீன பிரஜை தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.