இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் இடம்பெற்றிருப்பதோடு அவர் இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயல்திறன் நிலையத்துடன் நேரடியாக பணியாற்றவுள்ளார்.
இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகள் அண்மைய நாட்களில் மோசமான தோல்விகளை சந்தித்த நிலையில் அணியின் பயிற்சிக் குழாம் மற்றும் உயர் செயல்திறன் நிலையம் பின்னடைவை சந்தித்துள்ளன.
இலங்கை தேசிய அணி அண்மையில் ஆசிய கிண்ணம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த உலகக் கிண்ண போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்ததோடு இதனால் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான தகுதியையும் இழந்தது.
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ணத் தொடரில் தோல்விகளை சந்தித்து குழு நிலையுடனேயே வெளியேறியது.
இந்நிலையில் இலங்கையின் தற்போதைய கிரிக்கெட் கட்டமைப்பு தொடர்பில் மதிப்பாய்வு செய்து அதனை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த திட்டமொன்றை வகுக்கவும், இளையோர் முதல் தேசிய மட்டம் வரை நேர்தியான கட்டமைப்பையும், அபிவிருத்தியையும் மேற்கொள்ளும் நோக்குடனும் சனத் ஜயசூரியவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் மோசமான தோல்விகளை அடுத்து அதிரடி மாற்றங்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே ஜயசூரியவின் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே உபுல் தரங்க தலைமையில் புதிய தேர்வுக் குழு ஒன்றை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.
சனத் ஜயசூரிய முன்னதாக இலங்கை அணியின் தேர்வுக் குழு தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.