Thursday, March 28, 2024
Home » பங்களாதேஷிடமும் தோற்ற இலங்கை இளையோர் அரையிறுதியை இழந்தனர்

பங்களாதேஷிடமும் தோற்ற இலங்கை இளையோர் அரையிறுதியை இழந்தனர்

இளையோர் ஆசிய கிண்ணம்

by gayan
December 14, 2023 6:48 am 0 comment

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் பங்களாதேஷ் அணியுடனான கடைசி குழுநிலை போட்டியிலும் 6 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த இலங்கை இளையோர் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

டுபாயில் நேற்று நடைபெற்ற பி குழுவுக்கான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை இளையோர் அணி முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எந்த வீரரும் 20களுக்கு மேல் ஓட்டங்களை பெறவில்லை என்பதோடு ஏழு வீரர்கள் தமது ஓட்டங்களை 20கள் வரை எட்டிய நிலையில் விக்கெட்டை தாரைவார்த்தனர். விஷ்வ லஹிரு பெற்ற 25 ஓட்டங்களுமே அதிகமாகும்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த பங்களாதேஷ் இளையோர் அணியின் முதல் விக்கெட்டை ஒரு ஓட்டத்திற்கு வீழ்த்த முடிந்தபோதும் மறுமுனையில் இருந்த ஆரம்ப வீரர் ஆஷிகுர் ரகுமான் ஷிப்லி ஆபாராமாக துடுப்பெடுத்தாடினார். கடைசிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்த அவர் 130 பந்துகளில் 11 பெளண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 116 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் பங்களாதேஷ் இளையோர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இதன்மூலம் சினெத் ஜயவர்தன தலைமையிலான இலங்கை இளையோர் அணி ஆசிய கிண்ணத் தொடரில் ஆடிய மூன்று குழு நிலைப் போட்டிகளில் இரண்டில் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

முன்னதாக இலங்கை இளையோர் அணி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் தோற்றதோடு ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் மாத்திரமே வெற்றியீட்டியது.

இதன்படி நேற்று நடந்த மற்ற பி குழுவுக்கான போட்டியில் 107 ஓட்டங்களால் ஜப்பானை இலகுவாக வீழ்த்திய ஐக்கிய அரபு இராச்சியம், பங்களாதேஷுடன் பி குழுவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT