சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை துக்க தினமாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களது போராட்ட இடத்திற்கு முன்பாக
இன்று (10) காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகளாக போராடி வருகின்ற நிலையில் முல்லைத்தீவில் தமது உறவுகளுக்கு நீதி கோரி 2017.03.08 ம் திகதி முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை துக்க தினமாக தெரிவித்து இடம்பெற்ற குறித்த போராட்டத்தின் போது வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா ,மனித உரிமைகள் தினம் எமக்கு துக்க தினம் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தின் போத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
மாங்குளம் குரூப் நிருபர்