சமய நூல்களை முறையற்ற வகையில் கையாள்வதை தடை செய்யும் சட்டத்திற்கு டென்மார்க் பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குர்ஆன் சட்டமூலம் என்றே அந்நாட்டில் பரவலாக அறியப்படுகிறது.
பாராளுமன்றத்தில் 94–77 வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை மீறுபவர்கள் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்வார்கள்.
முஸ்லிம் உலகில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்திய முஸ்லிம்களின் புனித குர்ஆன் எரிப்பு சம்பவங்களை அடுத்தே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
டென்மார்க்கின் அண்டை நாடான சுவீடனிலும் அண்மைக் காலத்தில் இவ்வாறான சம்பவங்களை ஒட்டி பல வீதி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில் அது நாட்டின் பாதுகாப்புக் குறித்த அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்த சட்டமூலம் தொடர்பில் டென்மார்க் பாராளுமன்றத்தில் கடும் விவாதம் இடம்பெற்றதோடு எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலரும் இந்த சட்டமூலத்திற்கு எதிராக வாதிட்டனர்.
டென்மார்க்கில் சில வாரங்களுக்குள் வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்னால் குர்ஆனை எரிப்பது உட்பட 170 ஆர்ப்பாட்டங்கள் பதிவாகி இருந்தன. அதனை அடுத்தே கடந்த ஓகஸ்ட் மாதம் டென்மார் அரசு இந்த சட்டமூலத்தை கொண்டுவந்தது.