வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், இது குறித்து ஆய்வுகள் நடத்தப்படாமல் வெளியிடப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
அத்துடன் நாடு தவிர்க்க முடியாத முக்கிய தேர்தல்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், உபாயங்களை மாற்றியமைத்து, தேர்தல் வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதாகவே இந்த பட்ஜட்டை தாம், பார்ப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி வரவு செலவு திட்ட உரையில் நாடு வங்குரோத்து நிலைக்கு வழிவகுத்த போக்கை அப்பட்டமாக கூறியிருந்தார். இன்று, நமது நீதிமன்றம், நமது நாடு வங்குரோத்தாவதற்கான
உடனடி காரணங்களை வெளிப்படுத்தும் வரலாற்றுத் தீர்ப்பின் பின்னணியில் இந்த வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பு இலங்கையின் அரசியல் நோக்கு நிலையில், பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென, நான் நம்புகிறேன்.
அத்துடன், இந்த தீர்ப்பு அரசியல் நடத்தையின் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
அத்துடன், எந்த அறிவியல் ஆய்வும் இன்றி எடுக்கப்பட்ட முடிவுகளால், நாட்டின் தேசிய வருமானத்தில் பெரும் சதவீதத்தை இழந்து, மக்கள் மிகவும் வேதனையான சூழலையும், உலகத்தின் முன் அவமானகரமான சூழலையும் அனுபவிக்க நேரிட்டுள்ளது. இலங்கை பொருளாதார ரீதியில் தலை நிமிர வேண்டுமாயின், நாட்டை சரியான பாதைக்கு வழிநடத்த வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கோஷங்கள் மற்றும் விசித்திரக் கதைகளை உள்ளடக்கிய வழமையான, பாரம்பரியமான வரவு செலவுத் திட்ட உரைகளையே இலங்கையில் நாம் இன்னும் பார்க்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக வரவு செலவு திட்ட உரைகள் அதிக இலக்குகளைப் பற்றி பேசுகின்றன. என்றாலும், நாம் செயல்களையும் முடிவுகளையும் கவனிக்கும்போது, அந்த இலக்குகளை அடைவதில் தோல்வியைத் தொடர்ந்து காண்கிறோம்.
வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை இடைவெளியை எடுத்துக்கொண்டாலும், அரசின் வருமானத்தை எடுத்துக்கொண்டாலும், அரச செலவினங்களை எடுத்துக்கொண்டாலும், வரவு செலவுத் திட்ட ஆவணங்களில் கூறப்பட்டுள்ள இலக்குகள் எட்டப்படவில்லை என்பதே யதார்த்தம்.
2023 வரவு செலவுத் திட்டத்தில் 2022 ஐ
விட 65% வருவாய் அதிகரிப்பை
எட்டுவது குறித்து அரசாங்கம் பேசியது. ஆனால், அந்த இலக்கை நெருங்க முடியவில்லை. இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2023ஐ விட 45% வருமான அதிகரிப்பு குறித்து பேசுகிறது. அதாவது வருவாயை 4 டிரில்லியனாக அதிகரிப்பது என்பது ஒரு இலக்காகும்.