பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் இருநாள் தொடர் ‘கிரிக்கெட் விளையாட்டு விழா’ பதுளை கிரிக்கெட் மைதானத்தில் சங்கத்தின் தலைவர் அதிபர் கே. திருலோகங்கர், சங்கத்தின் செயலாளர் மகேந்திரன் செனவிரத்ன இணைத் தலைமையில் அண்மையில் (கடந்த சனி, ஞாயிறன்று) கோலாகலமாக நடைபெற்றது. 90 வருட நிறைவையொட்டி பாடசாலையின் மேம்பாட்டிற்காக நிதி திரட்டுமுகமாக இவ்விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மொத்தம் 20 பழைய மாணவர் சங்க அணிகள் போட்டியில் பங்குபற்றியிருந்தன. இறுதிப் போட்டியில் 2011 பிளாஸ்டர்ஸ் அணி, 2009 பீட்ஸ் அணியை வென்று சம்பியனாகி வெற்றிக்கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது. தொடரின் சிறப்பாட்டக்காரராக சுரேன், இறுதிப்போட்டியில் சிறப்பாட்டக்காரரராக நவநீதன், தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக சரத், சிறந்த துடுப்பாட்டக்காரராக ஜீவகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இறுதிநாள் பரிசளிப்பு விழாவின் போது பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்து சிறப்பித்தார். முதல்நாள் ஆரம்ப நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சுராஜ் அரவிந்தகுமார், வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சாரங்கி மற்றும் கல்வியியலாளர்கள், சங்க மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.