அமெரிக்க அரசாங்கம் சிக்குன்குனியா நோய்க்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நுளம்புகள் மூலம் பரவும் அந்த நோய்க்கு முதல்முறையாகத் தடுப்பூசி அறிமுகமாகியுள்ளது. 18 வயதை எட்டியவர்கள் ஒருமுறை அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
அந்தத் தடுப்பு மருந்தில் உயிரோடு உள்ள, பலவீனமான சிக்குன்குனியா வைரஸ் இருப்பதாக அமெரிக்க உணவு மருந்து ஆணையம் கூறியது.
அமெரிக்காவில் 3,500 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் அந்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
சிக்குன்குனியா உலக சுகாதாரத்துக்கு மிகப்பெரிய மிரட்டலாக இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. கடந்த பதினைந்து ஆண்டில் குறைந்தது 5 மில்லியன் பேரை அந்த நோய் தாக்கியுள்ளது.
காய்ச்சல் மற்றும் கடுமையான மூட்டு வலியை ஏற்படுத்தும் சிக்குன்குனியா, ஆபிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவின் ஒரு பகுதியின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் மிகவும் பரவலாக உள்ளது. இருப்பினும், சிக்குன்குனியா வைரஸ் புதிய புவியியல் பகுதிகளுக்கும் பரவியுள்ளதுஎன மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.