Home » மீண்டும் Race The Pearl – சர்வதேச போட்டியாளர்களுடன் 24 மணித்தியால சைக்கிளோட்டம்

மீண்டும் Race The Pearl – சர்வதேச போட்டியாளர்களுடன் 24 மணித்தியால சைக்கிளோட்டம்

by Rizwan Segu Mohideen
October 31, 2023 11:47 am 0 comment

உலகப்புகழ் பெற்ற Tour De France இன் வெற்றியாளரும், RAAM இன் போட்டியாளரும் பங்கேற்கும் 24 மணிநேர சைக்கிள் சவாரியானது, விளையாட்டு சார் சுற்றுலா வாய்ப்புக்களையும், சந்தைப்படுத்தலையும் ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாகும். 

Race The Pearl என்ற பெயரிலான 24 மணி நேர சைக்கிள் பந்தயம் இலங்கையில் மீண்டும் இடம்பெறுகிறது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், இந்தியா, இலங்கை ஆகியவற்றைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். 2013இல் நடைபெற்ற Tour De France சுற்றுத்தொடரின் 2ஆம், 3ஆம் கட்ட வெற்றியாளரும் பெல்ஜியத்தை சேர்ந்தவருமான Jan Bakelants, UCI Pro Race தொடரின் வெற்றியானரும் நெதர்லாந்தைச் சேர்ந்தவருமான Piotr Havik, அமெரிக்காவை குறுக்கறுத்துச் செல்லும் Race Across America (RAAM) போட்டியில் இந்தியாவின் சார்பில் முதன்முதலில் பங்கேற்றவருமான ஸ்ரீநிவாஸ் கோகுலநாதன் அடங்கலாக பல போட்டியாளர்கள் இலங்கையில் நடைபெறும் ஆறாவது போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இம்முறை இலங்கை, இந்திய நாடுகளைச் சேர்ந்த பெண் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள்.

Race The Pearl ஆனது அமெரிக்காவில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற நீண்ட தூர RAAM சைக்கிளோட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டியாக அமையும். RAAM தொடரில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 4,800 கிலோமீற்றரைக் கடப்பார்கள். இதற்குரிய தகுதிகாண் போட்டியில் பங்கேற்கும் 65 போட்டியாளர்கள் வடக்கில் பருத்தித்துறை முனையில் இருந்து தெற்கில் தேவேந்திர முனை வரை சவாரி செய்வார்கள். இந்த சவாரி 600 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக, 100 நகரங்களை இணைப்பதாக, வழிநெடுகிலும் ஒரு இலட்சம் பார்வையாளர்களை கடந்து செல்வதாக அமையும். அதிக துணிச்சலும், தைரியமும் தேவைப்படும் Race The Pearl போட்டியானது, அமெரிக்காவின் RAAM சவாரிக்காக போட்டியாளர்களைத் தெரிவு செய்யும் பிரதான தகுதிகாண் போட்டிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப் போட்டி ஒக்டோபர் 28ஆம் திகதி அதிகாலை பருத்தித்துறையில் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டு, 24 மணிநேரம் கழித்து, அதாவது 29ஆம் திக்வெல்லையில் முடிவடையும்.

இது பற்றிய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய Race The Pearl தொடரின் பணிப்பாளரும், ஏற்பாட்டாளருமான யசஸ் ஹேவகே, RAAM இற்கு தகுதி பெறுவதற்காக 24 போட்டியாளர்களும் தொடர்ந்து சவாரியில் ஈடுபடுவார்கள் என்றார். ‘இன்னும் சில போட்டியாளர்கள் அஞ்சலோட்ட முறையில் தனிநபர்களாக அல்லது குழுக்களாக ஐந்து கட்டங்களில் பங்கேற்பார்கள். இவர்களில் 24 மணி நேரம் என்ற எல்லைக்குள் போட்டியை பூர்த்தி செய்பவர்கள் இலங்கையின் வனஜீவராசி நலன்களை அடிப்படையாகக் கொண்டு பிரத்தியேகமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட என்ற பெறுமதியான Pearl Jersey யை பரிசாகப் பெறுவார்கள்‘.

சைக்கிளோட்டத்தில் கலந்து கொள்வோர் நகர்ப்புறங்களையும், கிராமப்புறங்களையும் தாண்டிச் செல்வதால், சவாரியில் பங்கேற்பவர்கள் பாதை நெடுகிலும் வர்த்தகர்களுடன் தொடர்பாடலில் ஈடுபட்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பார்கள்

Race The Pearl என்பது இலங்கையில் விளையாட்டுத்துறை சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கு சிறந்த சந்தைப்படுத்தல் களத்தை ஏற்படுத்தித் தருமென திரு. ஹேவகே வலியுறுத்தினார். ‘இந்தப் போட்டியானது சுற்றுலாத்துறைக்கு மிகவும் சவாலாக அமைந்த கடந்த மூன்று ஆண்டு காலமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் இருந்து போட்டியாளர்களைக் கவர்ந்திழுப்பதாலும், தொடரின் தகுதிகாண் போட்டியாக அமைவதாலும், இது இலங்கையின் சுற்றுலா வாய்ப்புகளுக்கு சிறந்த களமாகத் திகழும்,’ என்று அவர் மேலும் கூறினார்.

இந்த சைக்கிள் சவாரியை Gold Sponsor ஆக இணைந்து கொள்ளும் Jetwing Hotels உடன் சேர்ந்து Spinner Cycling அமைப்பு ஏற்பாடு செய்கிறது. MAS Holdings குழுமம் போட்டியாளர்கள் அணியும் Rider Jersey வடிவமைக்கிறது. போட்டியின் நிறைவு நிகழ்ச்சிகளுக்கு Dikwella Hotel, Browns Hotel Group அனுசரணை வழங்குகின்றன. இந்திய, இலங்கை நாடுகளுக்கு இடையிலான விடயங்களை Sol Fitness Resorts India ஒருங்கிணைக்கிறது. இலங்கையின் நற்பெயரை உலகறியச் செய்து, இலங்கையின் பிள்ளைகளுக்கு உதவும் முயற்சியில் Liv Foundation பங்குதாரராக இணைகிறது. ஊடக அனுசரணையாளர்களாக Daily FT, Pulse and YES FM ஆகியவை இணைந்து கொள்கின்றன

ஊடக மாநாட்டைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை சுற்றலா பற்றி கலந்துரையாடும் நிகழ்ச்சியை Daily FT பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் நிஸ்தார் காஸிம் நடத்தினார். இதில் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக விளையாட்டுத்துறை சுற்றுலாவைப் பயன்படுத்துவது முதலான விடயங்கள் ஆராயப்பட்டன. இதில் RTP ஏற்பாட்டாளர் யசஸ் ஹேவகே, Assort Creative அமைப்பின் ஷெனெல்லா ரொட்ரிகோ மற்றும் ஷெஹான் தாஹிர், Yeti Isotonic அமைப்பின் நிஷெல்லி பெரேரா, Jetwing Hotels இன் திமித்திரி குரே ஆகியோர் பங்கேற்றனர். உலக சுற்றுலா வரைபடத்தில் விளையாட்டுத்துறை சுற்றுலாவின் கேந்திர நிலையமாக மாறக்கூடிய ஆற்றல் இலங்கைக்கு உண்டென அவர்கள் தெரிவித்தனர்.

இது பற்றிய விபரங்களை www.racethepearl.com இலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் அறியலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT