கனரக வாகன இயக்குனர் பயிற்சி நெறியை நிறைவு செய்த மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (03) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிந்தனைக்கு அமைவாக நடாத்தப்பட்ட இப்பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சரின் பணிப்புரையின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம் ஒரு மாத கால இப் பயிற்சி நெறியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவில் தொழிலின்றி காணப்படும் இளைஞர்களின் தொழில் வாய்ப்பை அதிகரிப்பதற்காக அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம் ஊடாக இக் கற்கை நெறி மாவட்ட செயலகத்தின் நெறிப்படுத்தலின்கீழ் நாடாத்தப்பட்டது.
இக் கற்கை நெறியினை பூர்த்தி செய்பவர்களுக்கு மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பெறுமதியான சான்றிதழ்கள் இதன்போது பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
கனரக வாகன இயக்குனர்களுக்கான கற்கை நெறிகள் வெளிமாவட்டங்களில் இடம் பெற்று வரும் நிலையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பணிப்புரையில் மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்..
கல்லடி குறூப் நிருபர்