ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையில் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் (02) சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, இந்தியா-இலங்கைக்கு இடையிலான வரலாற்று மற்றும் கலாசார ரீதியான பௌத்த
தொடர்புகளை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களுக்காக இந்திய அரசாங்கத்தால், 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு இருதரப்பு ஆவணங்களையும் அவர்கள் இருவரும் பரிமாறிக்கொண்டனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அன்பளிப்பானது, இரு நாடுகளுக்கும் இடையில் பௌத்த தொடர்பை பலப்படுத்தும் முக்கிய அம்சமாகுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
பௌத்த விகாரைகளின் கட்டுமானம், புனரமைப்பு, கலாசார பரிமாற்றம், தொல்பொருள் ஒத்துழைப்பு, இரு நாடுகளும் அந்நியோன்ய தாதுக்களை காட்சிப்படுத்துதல், மத ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற விடயங்களுக்காக இந்த நிதி அன்பளிப்பை பயன்படுத்த முடியும்.
இந்த அன்பளிப்பை, இலங்கை பொருளாதாரத்தின் மாறிவரும் நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை ரூபாவிலிருந்து இந்திய ரூபாவரையான கையிருப்பு ரீதியான பரிமாற்றத்தை மேற்கொள்ள, இரு நாடுகளும் இணங்கியுள்ளதுடன், சந்தை நிலைமைக்கேற்ப அதனை மாற்றியமைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டுக்கமைவான பரிமாற்றத்தின் மூலம் இராஜதந்திர ஆவணங்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை இந்திய – இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டுக்கு அமைவான இருதரப்பு ஒப்பந்தம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் புத்தசாசன சமய, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதாணபத்திரண ஆகியோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இந்த அன்பளிப்பின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள பௌத்த விகாரைகளில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரியசக்தி திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கைசாத்திடப்பட்டது. இதனையடுத்து இருநாட்டு பிரதிநிதிகளும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.