Friday, March 29, 2024
Home » காஸாவில் இதுவரை கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் தாண்டியது!

காஸாவில் இதுவரை கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் தாண்டியது!

by gayan
November 5, 2023 6:03 am 0 comment

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரினால் காசாவில் பலி எண்ணிக்கை 9,000-ஐ தாண்டியுள்ளது என பலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போர் தொடங்கிய ஒக்டோபர் 7 முதல் இதுவரை காசாவில் உயிரிழந்தோர்கள் எண்ணிக்கை மொத்தமாக 9,061 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,760 குழந்தைகள் மற்றும் 2,326 பெண்கள்.

பலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 2,600 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 1,150 குழந்தைகள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர், காசாவில் 16 மருத்துவமனைகள் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்துக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகின்றது. இஸ்ரேல் இராணுவத்தின் பீரங்கிகள் வடக்கு காசாவில் ஒரு இடத்தில் மொத்தமாக நிறுத்தப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்று அல் ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தரைவழித் தாக்குதலுக்கு மத்தியில் கடந்த சில மணி நேரங்களாக வான்வழித் தாக்குதலையும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலின் வெளியுறவுத் துறை நிர்வாகி எஜாஸ் ஹைதர் கூறுகையில், “ஹமாஸ் இருக்கும் இடத்தை நோக்கி இஸ்ரேல் இராணுவம் பல முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்திவருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார். .

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பலஸ்தீன பகுதிகளில் சிக்கியிருக்கும் அமெரிக்கர்களை மீட்கும்விதமாக இஸ்ரேல் தற்காலிகமாக போரை நிறுத்த வேண்டும் என அவர் பேசியிருக்கிறார்.

இரட்டை குடியுரிமை பெற்றவர்களையும், இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் காயமடைந்தவர்களையும், வெளிநாட்டவர்களையும் காசாவில் இருந்து வெளியேற்றும்விதமாக ரஃபா எல்லை திறந்துள்ளது எகிப்து.

இந்த எல்லை வழியாக சுமார் 7000 பேர் வெளியேற்றப்பட இருப்பதாக எகிப்து தெரிவித்துள்ளது. வெளியேற்றம் தொடர்ந்து வருகிறது.

தங்களது இராணுவத்தின் ட்ரோன் லெபனான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா இயக்கத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலின் ட்ரோன்களை ஹிஸ்புல்லா தாக்குவது இது இரண்டாவது முறையாகும். காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மூன்றாவது முறையாக மீண்டும் தாக்கியுள்ளது. முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அதற்கு முன்தினம் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. மொத்தமாக இந்த மூன்று தாக்குதலில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். 777 பேர் காயமடைந்தனர். மேலும் 120 பேர் காணவில்லை என பலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது, இஸ்ரேல் பகுதியில் இருந்த வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதுதவிர ஆயிரக்கணக்கான ரொக்கெட் குண்டுகளையும் வீசினர். இதையடுத்து இஸ்ரேல் இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 1,500 பேரும் காசா பகுதியைச் சேர்ந்த சுமார் 9,061 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை பிணைக் கைதிகளில் 2 அமெரிக்கர்கள் உட்பட 4 பேரை மட்டும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். மேலும் ஒரு இராணுவ வீரரை இஸ்ரேல் படையினர் மீட்டுள்ளனர். இப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னமும் இதற்கான சமாதான நிலை எட்டப்படவில்லை.

இவர்களின் மத்தியில் சிக்கித் தவிக்கும் காசா பகுதி மக்கள் உண்ண உணவு, குடிநீர், மின்சாரம் என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வீதியில் உலா வரும் அவலநிலை அங்கு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவர், “காசாவில் போர் நிறுத்தம் குறித்த இஸ்ரேல் நாட்டின் நிலைப்பாட்டினை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல் ஹமாஸ் குழுவிடம் சரணடைவதற்கு சமம். அவ்வாறு செய்தால் பயங்கரவாதத்திற்கு அடிபணிவது போல் ஆகிவிடும். அது ஒருபோதும் நடக்காது” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ேலும், ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT