மலையக பெருந்தோட்ட மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடை பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, திருமதி நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
மலையக மக்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆசிரியர் பயிற்சி வழங்கல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுமென்றார்.
அத்துடன் ‘நாம்200’ ஆண்டு விழாவில் இந்திய நிதியுதவியின் கீழ் 04ஆம் கட்டமாக 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கொட்டக்கலை மவுண்ட் வெர்னன் தோட்ட கீழ் திம்பில வலயத்தில் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கு ஒன்லைன் ஊடாக அடிக்கல் நாட்டி வைத்தனர்-.
இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான இணைப்புப் பாலமாக மலையகத் தமிழர்கள் திகழ்வர்களென்றும் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.