பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை வளர்ந்துவரும் அணி நேற்று முன்றாவது நாள் ஆட்டநேர முடிவின்போது 7 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தம்புள்ளையில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியினர் முதல் இன்னிங்ஸில் 251 ஓட்டங்களை பெற்றனர். மத்திய வரிசையில் அக்பர் அலி 129 ஓட்டங்களை பெற்றபோதும் வேறு எந்த வீரரும் அரைச் சதம் கூட பெறவில்லை. வலது கை வேகப்பந்து வீச்சாளர் சாமிக்க குணசேர 19.5 ஓவர்களில் 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை வளர்ந்துவரும் அணி சார்பில் எந்த வீரரும் நின்றுபிடித்து ஆடவில்லை. முதல் 5 விக்கெட்டுகளும் 105 ஓட்டங்களுக்கே சுருண்டன. விக்கெட் காப்பாளர் பவன் ரத்னாயக்க மாத்திரம் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறார். அவர் 91 பந்துகளில் 6 பெளண்டரிகளுடன் 44 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதன்படி இலங்கை வளர்ந்துவரும் அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 3 விக்கெட்டுகள் கைவசம் இருக்க பங்களாதேஷை விடவும் 32 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது. நான்கு நாட்களைக் கொண்ட இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்றாகும்.