இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் ‘நாம் 200’ நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பங்கேற்கும் இந்நிகழ்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் முழுமையான பங்களிப்புடன் நடைபெறும் இவ்விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, மற்றும் அமைச்சர்கள் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், தமிழக அரசியல் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன உட்பட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரும் பலமாகவுள்ள மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றையும், நாட்டுக்காக அம்மக்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூரும் வகையிலேயே, இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் மலையக பெருந்தோட்ட மக்களின் 200 வருட வரலாற்றை பிரதிபலிக்கும் முகமாக சிறப்பு நாணயம் வெளியீடு, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஜீவன சக்தி – ஆயுள் காப்புறுதி திட்டம் என்பன நிகழவுள்ளன. 200 வருட வரலாற்றை பிரதிபலிக்கும் முகமாக ஒரு நினைவு முத்திரையும் இங்கு வெளியிடப்படும்.
படைப்பாற்றல் கதைசொல்லலை ஊக்குவிப்பதற்காக இலங்கையில் உள்ள அனைத்து பெருந்தோட்ட பாடசாலைகளிலும் கல்வி அமைச்சுடன் இணைந்து கலை, புகைப்படம், கட்டுரை மற்றும் குறுந்திரைப்பட தயாரிப்பு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மலையக கலாசார மற்றும் வரலாற்றைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு சிறு நாடகம் என்பவற்றுடன் முன்மாதிரிகள், சமூகப் பிரதிகளை உள்ளடக்கிய மலையகப் பிரச்சனைகள் பற்றிய உரையாடல்கள், குழு விவாதங்களும் நடைபெறவுள்ளன. 2024 முதல் நவம்பர் முதல் வாரத்தை பெருந்தோட்ட சமூகத்தின் தேசிய வரலாற்று வாரமாக அறிவிக்க தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மொன்மொழியவுள்ளது.