கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நவம்பர் 20 மீண்டும் ஆரம்பிக்கப்படுமென சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.
மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நேற்றையதினம் அகழ்வு பணி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமூகமளிக்காத காரணத்தினால் கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகள் மீளவும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுத் தொகை பணம் எவ்வளவு என்பது தொடர்பாக கலந்துரையாடி அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த பிற பொருட்கள் தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவை என்ற அடிப்படையில் முழுவதும் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
ராஜ்சோமதேவ அப்பகுதியில் 50 மீற்றருக்குள் வேறு மனித எச்சங்கள் இருப்பது சம்பந்தமாக கண்டுபிடிக்கக்கூடிய ராடர் கருவியொன்றை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
அது தொடர்பான முழுமையான விபரங்களை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் படி நீதிமன்றத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இவ்விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அதற்கான ஒன்றுகூடல் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுபணி இடம்பெறவுள்ளது.
(ஓமந்தை விசேட நிருபர்)