திருட்டு போன்ற குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு போதைவஸ்துக்கு அடிமையானோரே காரணமென்று மீலாத்நகர் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பொலிஸ் அதிகாரி தகவல்!
திருட்டுக்களில் ஈடுபடுகின்றவர்களில் கணிசமானோர் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தெரிவித்தார்.
திருடர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென்றும், தங்கள் பகுதிகளில் அசாதாரணமாக உலவுகின்றவர்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ‘மீலாத் நகர்’ கிராமத்தில் (அட்டாளைச்சேனை 05ஆம் பிரிவு) குற்றச்செயல்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஹசீப் – மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.
அண்மைக் காலமாக மீலாத் நகர் கிராமத்தில் ஏராளமான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை குறித்து – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், குற்றச் செயல்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வை ‘மீலாத் நகர் நலன்புரி அமைப்பு’ ஏற்பாடு செய்திருந்தது.
அங்கு பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஹசீப் தொடர்ந்து பேசுகையில் “இங்குள்ள அதிகமான வீடுகளில் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் இல்லை என்பதுதான், இந்தக் கிராமத்தில் குற்றச் செயல்கள் நடப்பதற்கு பிரதான காரணமாகும். வசதி படைத்தவர்கள் இங்குள்ள தமது வீடுகளில் அவர்களின் பெறுமதியான பொருட்களை வைத்து விட்டு, அவர்கள் வசிக்கும் வேறு வீடுகளுக்குச் சென்று விடுகின்றனர். இது திருடர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது. திருடர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குப் பயப்படாமல் பொலிஸ் நிலையத்தில் முறையிடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு நாம் உதவுவோம்” எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய – ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல். வாஹிட் உரையாற்றுகையில் மீலாத் நகர் கிராமத்தின் வரலாறு பற்றி நினைவுபடுத்தினார்.
1997ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையில் தேசிய மீலாத் நபி விழா நடைபெற்ற போது, அப்போது புனர்வாழ்வு அமைச்சராக இருந்த – முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்பின் முயற்சியினால், தேசிய மீலாத் நபி விழா நினைவாக உருவாக்கப்பட்டதே – மீலாத் நகர் எனும் இந்தக் கிராமம் என அவர் குறிப்பிட்டார்.
“இந்தக் கிராமத்தை எந்த விருப்பத்தின் அடிப்படையில் அஷ்ரப் உருவாக்கினாரோ, அது நினைவேறவில்லை. தற்போதைய மீலாத் நகர் கிராமத்தின் முன்னைய பெயர் – பெரிய முல்லைத்தீவு. இந்தக் கிராமத்தில் 110 வீடுகள் அமைப்பதற்கான நிதியுதவி அஷ்ரப் காலத்தில் வழங்கப்பட்டது. இங்கு பாடசாலை, பள்ளிவாசல் அமைக்கப்பட்டன. மூலைமுடுக்குகளெல்லாம் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டன. 10 பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டன.
ஆனால், இந்தக் கிராமத்தில் இருந்தவர்கள் இங்கிருந்து கணிசமானளவு வெளியேறிச் சென்று விட்டார்கள் என்றும், அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய மீலாத் நபி விழாவின் நினைவாக உருவாக்கப்பட்ட மீலாத் நகர் கிராமத்தில் அதிகளவான குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றமை கவலைக்குரிய விடயமாக உள்ளது என அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர் தெரிவித்தார். (06ஆம் பக்கம் பார்க்க)