முன் தொடை பகுதியில் உபதைக்கு உள்ளாகி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் லஹிர குமார உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் மேலதிக வீரராக இந்தியா சென்றிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர அழைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்த லஹிரு குமார, நேற்று முன்தினம் நடந்த பயிற்சியின்போது இடது கால் முன் தொடை பகுதியில் வலியை உணர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சோதனையில் உபாதை ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து துஷ்மன்த சமீர இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டிருப்பதோடு ஒப்புதலுக்காக சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் தொழில்நுட்பக் குழுவுக்கு அவரது பெயர் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை அணியில் ஏற்கனவே உபாதைகளால் அணித் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் சாமிக்க காருணாரத்ன மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணிக்காக இதுவரை 44 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் துஷ்மன்த சமீர உபாதை காரணமாக உலகக் கிண்ண குழாத்தில் சேர்க்கப்படாத நிலையில் உடல் தகுதி பெற்றதை அடுத்து மேலதிக வீரராக அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.