பாலஸ்தீன மோதல் ஆரம்பமான முதல் நாள் தொடக்கம் இன்று சவூதி அரேபியா பல நாடுகளின் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கலந்துரையாடல்கள்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது.
ஜோர்தான் மற்றும் பலஸ்தீனத்திற்கான சவூதி அரேபியத் தூதுவர் நாயிப் பின் பந்தர் அல்-ஸுதைரீ அவர்கள் இரண்டு மில்லியன் டொலர் பெறுமதியான ஒரு காசோலையை, மத்திய கிழக்கிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் வேலைகள் முகவராண்மைக்குக் (UNRWA) கையளித்துள்ளார்.
மேற்படிச் செய்தியை ஜோர்தானில் இருக்கும் ஸவூதி அரேபியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இக்காசோலையை மத்திய கிழக்கிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் வேலைகள் முகவராண்மையின் ஆணையாளர் நாயகம், ப்லிப் லஸ்ஸாரினி அவர்கள் உத்தியோக பூர்வமாகப் பெற்றுக்கொண்டார்கள். பாலஸ்தீன அகதிகளுக்காகவென உருவாக்கப்பட்ட மேற்படி அமைப்பிற்கு ஸவூதி அரேபியா ஒவ்வொரு வருடமும் பாரியளவு நிதியுதவி வழங்கிவருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் ஈவிரக்கமின்றி, சர்வதேச சட்டங்களையும் பொருட்படுத்தாது பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் உட்பட பல்லாயிரக்காண அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றுகுவித்துக்கொண்டிருப்பது அறிந்த விடயமே. அநியாயமாக பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து, பூர்வீகக் குடிகளான அரபு பலஸ்தீன மக்களைக் கொலைசெய்தும், வீடுகளில் இருந்து வெளியேற்றியும் தன் அடவாடித்தனத்தைப் பல வருடங்களாகத் தொடர்கின்றது இஸ்ரேல். சர்வதேச சமூகமே மௌனித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில், சவூதி அரேபிய அரசு பாரிய மனிதாபிமான உதவிகளை அள்ளிவழங்கிக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கான மன்னர் ஸல்மான் மையத்தின் ஊடாகவும் பெருமளவு நிவாரண உதவிகள் பலஸ்தீன மக்களுக்காக தொடர்ந்தும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இம்மையத்தின் நிவாரண உதவிகள் வழங்கப்படும் நாடுகளில் பலஸ்தீனம் முன்னிலையில் உள்ளது.
அல்லாஹ் பாலஸ்தீன மக்களுக்கு வெகுவிரைவில் பூரண விடுதலையை வழங்கவேண்டும் எனப் பிரார்த்திப்போம்.
உலக அமைதி விடயத்திலும், குறிப்பாக பாலஸ்தீன மக்கள் விடுதலை தொடர்பிலும் மிகுந்த அக்கரையோடு செயற்படும், மன்னர் ஸல்மான் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் தலைமையிலான சவூதி அரேபிய அரசின் நற்பணிகள் தொடரவும் பிரார்த்திப்போம்.
அஷ்ஷேக் ளபர் இப்னு முஹம்மத் அஜ்வாத்
(பஹ்ஜி, B.A. மதீனா)