அநுராதபுரம் கல்வி வலயத்திலுள்ள மிஹிந்தலை மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) சுமார் 55 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆங்கிலம் மற்றும் கணித செயற்பாடு அலகு அண்மையில் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோனும் கலந்து கொண்டார். பொதுக் கல்வி நவீன மயமாக்கல் திட்டம் (GEMP) இதற்கான நிதியை வழங்கியுள்ளது.
மிஹிந்தலை மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) பெரும் குறைபாடாக இருந்த ஆங்கில மொழி நடவடிக்கைகள் மற்றும் கணித செயற்பாடுகள் பிரிவை இவை நிவர்த்தி செய்கின்றது. வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் ஆங்கிலம் மற்றும் கணித செயற்பாடுகளை சிறந்த கல்வி நிலைக்கு உயர்த்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்போது, முன்னாள் வடமத்திய மாகாண சபை அமைச்சர் கமகே வீரசேன, மாகாண கல்வி மற்றும் பிரதம அமைச்சின் செயலாளர் அபய லக்ஷ்மி ஹேவாபத்திரன, மாகாண ஆளுநர் செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க, வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். டப்ளியூ.சமரகோன் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
(கல்நேவ தினகரன் விசேட நிருபர்)